ஜெயலலிதாவின் புகழைப் பற்றி அண்ணாமலை கூறுவதா? விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
ஆர்.பி.உதயகுமார்
மதுரை அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகளை காப்பதற்கு கோடான கோடி தொண்டர்கள் இருக்கும்போது, அண்ணாமலையின் தேவையும், தயவும் அதிமுகவிற்கு எப்போதும் தேவையில்லை.
அண்ணாமலை வேண்டுமானால் அதிமுகவின் உறுப்பினராக சேர்ந்து ஜெயலலிதாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லட்டும். பாஜகவின் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, சாவர்க்கர் போன்றவர்களின் சாதனைகளைப் பற்றி அண்ணாமலை பேச வேண்டும்.
உள்நோக்கம்
அந்த கொள்கைகளை வைத்து மக்களை கவர வேண்டும். ஆனால் அதை விடுத்து, தாய் தமிழகத்திற்காக தன்னையே அர்ப்பணித்து, தன் வாழ்நாளெல்லாம் தமிழர்களுக்காக உழைத்து, இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிய ஜெயலலிதாவின் புகழைப் பற்றி அண்ணாமலை கூறுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.
ஆனால் அவர் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது, பாராட்டுவதில் கூட அரசியல் நோக்கம் இருக்கும்போது, அதை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?" என்று தெரிவித்துள்ளார்.