சட்டமன்ற தேர்தலில் வென்ற அதிமுக எம்.பிக்கள்.! அடுத்து என்ன நடக்கப்போகிறது?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களான கே.பி. முனுசாமியும் ஆர். வைத்திலிங்கமும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து எம்எல்ஏ பதவியை ஏற்பதாக இருந்தால் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தாக வேண்டும்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானால் அந்த இடங்களுக்கு கட்சியின் சார்பில் வேறு யாரையாவது தேர்வு செய்யப்பட வேண்டும்.
அது எம்எல்ஏ பலத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகும். தற்போது அதிமுகவுக்கு 65 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஒரு எம்பியை அக்கட்சியினரால் தேர்வு செய்ய முடியும்.
மற்றொரு எம்.பியை தேர்வு செய்ய போதிய பலம் அதிமுக அணிக்கு இருக்காது என்ற நிலையே நீடிக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கே.பி. முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டிட்டு வென்றுள்ளார்.
இதேபோல ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வென்றுள்ளார். மாநிலங்களவையில் தற்போது எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், என். சந்திரசேகரன், என். கோகுலகிருஷ்ணன், கே.பி. முனுசாமி, ஏ. நவநீதகிருஷ்ணன், எம். தம்பிதுரை, ஆர். வைத்திலிங்கம், ஏ. விஜயகுமார் உள்பட 8 உறுப்பினர்கள் உள்ளனர்.
அக்கட்சியின் மற்றொரு உறுப்பினர் முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்த பிறகு அந்த இடம் காலியாக உள்ளது. எனினும், அந்த இடம் காலியாகி விட்டதாக இன்னும் மாநிலங்களவை செயலகம் அறிவிக்கை வெளியிடவில்லை.
அதிமுக தரப்பில் எஸ்.ஆர்.பி, நவநீதகிருஷ்ணன், ஆர். வைத்திலிங்கம், ஏ. விஜயகுமார் மற்றும் திமுக தரப்பில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கேோவன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. முனுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நிறைவடைகிறது.
எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்குப் பிறகு தான் அதிமுகவில் என்ன அதிரடியாக மாற்றங்கள் நிகழ இருக்கின்றன என்பது தெரிய வரும்.