‘’ துரைமுருகன் சொல்வது வடிகட்டின பொய் ‘’ - கோபத்தில் ஓ.பி.எஸ்
நீட் தேர்வு குறித்து, துரைமுருகன் கூறும் வாதமே வடிகட்டின பொய் என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தற்போது மீண்டும் பூதகாரமாகியுள்ளது, இந்த நிலையில் ,அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ .பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திரு.மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது என்ற திரு.துரைமுருகன் அவர்களின் வாதமே வடிகட்டின பொய். செய்த தவறை ஒத்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த அதிமுகவை குறை சொல்வது கண்டனத்திற்குரியது. pic.twitter.com/N2hsJURIsS
— O Panneerselvam (@OfficeOfOPS) February 6, 2022
"நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அதிமுக மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையினை பார்த்தால் "எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள்" என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.
திமுகவின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை அதிமுகவுக்கு உண்டு" என்று குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் , மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அதிமுக ஆட்சி நடத்தியதாக துரைமுருகன் கூறி உள்ளார்.
யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதே சமயத்தில் தமிழகத்தின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்கமாட்டோம்.
காரியம் பெரிதா, வீரியம் பெரிதா' என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது. அதனால்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்தன என்பதை துரைமுருகன் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, திமுக என்ன செய்து கொண்டிருந்தது? அதற்குக் பெயர் என்ன? என்பதை துரைமுருகன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.
செய்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்லத் திட்டங்களை தமிழகத்துக்கு அளித்த அதிமுகவை குறை சொல்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது.
'கருமமே கண்ணாயினார்' என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.