அதிமுக செய்தால் ரத்தம் திமுக செய்தால் தக்காளி சட்னியா?

admk ops
By Irumporai Dec 28, 2021 05:58 AM GMT
Report

விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கின்ற நிலையில் திமுக எதையெல்லாம் எதிர்த்ததோ, அதெல்லாம் செயல்பாட்டிற்கு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கி பேசிய தமிழக முதல்வர், சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு ,ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கியதை, ஒரு மிகப்பெரிய சாதனை போல சித்தரித்து, இதுபோன்ற அரசு இந்தியாவிலேயே இல்லை என்று பேசினார்.

ஆனால் இந்த புதிய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்த படுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இன்றைக்கு அந்த மின் இணைப்புகளில் எல்லாம் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், இது மட்டுமல்லாமல் இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி தெரிவிக்கையில் , விவசாயத்திற்கு இலவசமாக தொடர்ந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருத்தப்படவில்லை என்றும் எவ்வளவு மின் பயன்பாடு எவ்வளவு உள்ளது என்பதை அறியத்தான் என்றும் கூறியுள்ளார்.

இதே தானே புரட்சி தலைவி அம்மா அவர்கள் சொன்னார்கள். அதிமுகவும் சொன்னது . அப்போது அதை விமர்சித்தவர்கள், இப்போது அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக செய்தால் அது ரத்தம் ; திமுக மேற்கொண்டால் தக்காளி சட்டினி என்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது.

மீட்டர் பொருத்த எந்த ஒரு புதிய மின் இணைப்பு வழங்க கூடாது . இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க எல்லா இணைப்புகளிலும், மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு என்றில்லாமல் ,விவசாயிகளின் அச்சத்தை நீக்கும் வகையில் ,மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு .

மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் அவர்களை அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.