தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு
resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்
தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்று வரும் 5 ஆம் நாள் விவாதத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்த தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார்.

தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன்.
இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார். நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.
இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர்.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுக்கான ஜனநாயக உரிமை.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.
தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்" என பேசினார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்த தீர்மானம் குறித்து கட்சிகளின் சார்பில் அதன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், பாஜக எம்எல்ஏ போஜராஜன், உள்ளிட்டோர் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்றாலும், தனித்தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |