அதிமுக அமைச்சர்கள் கூட்டம் மே 10ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக அமைச்சர்களின் கூட்டம் மே 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன் வென்று இன்றைய தினம் ஸ்டாலின் முதல்வராகவும் பதவியேற்ற கொண்டுவிட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.
அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், 16-வது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அ.தி.மு.க. இடம்பெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.
இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்கவிருந்தனர். இதனை தொடர்ந்து மாலை 4 மணி முதலே அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் குவியத் தொடங்கினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தலைமை கழகத்திற்கு வந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதாக இருந்தது. மேலும், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இதற்கிடையில், அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற விருந்த நிலையில் அந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஆதரவாளர்களின் கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு கூடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். ஆனால் கூட்டம் தொடங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 3 மணிநேரம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிமுக தலைமை அலுவலகத்தின் முதல் தளத்திலேயே அமரவைக்கப்பட்டிருந்தனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தின் கீழ்தளத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வளர்மதி உள்ளிட்ட முக்கிய நபர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் யார் எதிர்க்கட்சி தலைவர்? எடப்பாடி பழனிசாமியா ஓ.பன்னீர்செல்வமா? என்பது குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தை முடித்துவிட்டு சுமார் அரைமணி நேரம் மட்டுமே எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பேசினர். அதன்பிறகு இந்த கூட்டம் என்பது ஒத்திவைக்கப்படுவதாகவும், மீண்டும் வருகிற 10-ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூட வேண்டும் என்று அதிமுக தலைமை செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.
ஆகையால், வரும் 10-ம் தேதி தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது குறித்த முடிவு என்பது தெரியவரும். எதிர்க்கட்சி தலைவராவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது ஓ பன்னீர் செல்வமா? என்பது 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தெரியவரும். இன்றைய கூட்டத்தில் எந்த வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை மாறாக காரசார விவாதம் மட்டுமே நடைபெற்றதாக கூறப்படுகிறது.