உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்; அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு!
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றியுள்ளார்.
அதிமுக மாநாடு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது. இதற்காக மதுரை வலையங்குளத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு உரையாற்ற வந்தபோது அதிமுக தொண்டர்கள் உற்சாக வர வெற்பு அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமி பேச்சு
மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது 'பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவை வணங்கி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் உண்மை விசுவாசமிக்க தொண்டர்களே!
இந்த பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக. 1972 அக்டோபர் 17-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியை தோற்றுவித்தார். இன்று அதிமுக பொன்விழா கொண்டாடி 51ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 51 ஆண்டுகாலத்தில் 31 ஆண்டுகாலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக.
அதிமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது. கடைக்கோடி சாமானியனுக்கும் நன்மை கிடைத்தது. அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக செயல்பட்டு காட்டிய அரசு அதிமுக அரசு. அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது ஏனென்றால் அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன்.
மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான். தொடங்கிய ஆறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுக தான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.