யாருக்கு யார் போட்டி..! கட்சி address இல்லாம போயிடும் - எடப்பாடி பழனிசாமி தாக்கு
அண்ணாமலை தமிழகத்தில் தங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி என குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்
இன்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டு அதனை செய்வது அரசின் கடமை என குறிப்பிட்டார்.
திமுக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என தனது விமர்சனத்தை முன்வைத்த அவர், திமுக ஆட்சியில் நிறைய பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன என கூறினார்.
கட்சி முகவரி இல்லாமல் போய்விடும்
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என குறிப்பிட்டு, யார் எதிர்க்கட்சி என்று மக்களுக்கு தெரியும் என கூறி, அண்ணாமலை வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்ற கருத்துக்களை கூறி வருகின்றார் என விமர்சனம் செய்தார்.
பாஜவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது என கூறி யாருக்கு யார் போட்டி என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது புரியும் எனக் கூறினார். மேலும் தேசிய கட்சிகள் கூட மாநில பிரச்சனைகளை வைத்தே அரசியல் செய்கின்றன என தெரிவித்து, தமிழக மக்களின் உரிமைகளை காப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது என்றார்.
டிடிவி தினகரன் குறித்தும் பேசிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனின் கட்சி இந்த தேர்தலுடன் முகவரி தெரியாமல் போய்விடும் என கடுமையாக சாடினார்.