அதிமுக பொதுக்குழு வழக்கு : இன்று மீண்டும் விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு, இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கு
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணனும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் குரு கிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது .
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கிய போதும் தேர்வு முறையில் மாற்றம் இல்லை. பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து விளக்கம் தர வேண்டும் என்று அறிவித்தார்.
நீதிபதி சரமாரி கேள்வி
அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என்றும் , அவர் கேள்வி எழுப்பினார் . தமிழ் மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவை தலைவராக நியமிக்கப்பட்டாரா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதேசமயம் பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற பிறகுதான் தமிழ் மகன் உசேன் அவை தலைவராக அறிவிக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர் என்றும், சசிகலா சிறை சென்றதால் 2016 ஆம் ஆண்டு பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று 2017 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டப்பட்டது எனவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு, இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.