ஜாமீனில் வெளி வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் சந்திப்பு
சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.
மேலும், தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டதால், அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது .
மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை புழல் சிறையில் இருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளி வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சந்தித்தனர்.
மேலும் முன்னாள் அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.