சசிகலாவை நிச்சயம் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. இல்லையெனில்?: ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேட்டி
திமுகவை எதிர்க்க அதிமுகவுக்கு சசிகலா தேவை என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக தலைமைக்கு முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல ஆளுமை உள்ளதாகவும் குருமூர்த்தி கூறியிருக்கிறார்.
தேசியத்தை விரும்புகிறவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை வைத்து கவனித்தால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பதை அறிய முடிகிறது.
இதன் காரணமாகவே சசிகலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுவெளியிலேயே அதிமுக தலைமைக்கு பகிரங்க கோரிக்கையை வைத்திருக்கிறார்.