திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? எல்.முருகன் கேள்வி
திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா? கனிமொழியா? அல்லது உதயநிதியா? என்று சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சி நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்காகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனிப் பிரிவை உருவாக்கினார்.
மின்தடை, விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டனர் என அனைவருக்கும் தெரியும். இதனால் வரும் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படுவது உறுதி. பெண் உரிமை பற்றி பேசும் திமுகவில், அந்த கட்சியின் பெண் நிர்வாகி பூங்கோதை ஆலடி அருணாவுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா? கனிமொழியா? உதயநிதியா? என கூறமுடியாத நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரையில் நடந்த பாஜக நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்றவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரி இடைத்தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.