தமிழ்நாட்டின் ஆப்ரகாம்லிங்கன் எடப்பாடி பழனிச்சாமி! பொள்ளாச்சி ஜெயராமன் புகழாரம்
தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் எடப்பாடி பழனிச்சாமி என்று பொள்ளாச்சி ஜெயராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம், ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என அதிமுக பொதுக்குழுவில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். முன்னதாக பேசிய அவர், தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கனாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ஜெயலலிதாவால் நேரடியாக இரண்டு முறை முதல்வராக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
அதேபோல் கூட்டத்தில் பேசிய வளர்மதி, ராமர் லட்சுமணர்கள் போல இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். மருது சகோதரர்கள் போல இபிஎஸ், ஒபிஎஸ் இணைந்து வெற்றி பெறுவார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.