அதிமுக கூட்டணி தொடர வேண்டும்...பேசி வருகிறோம் - வி.பி.துரைசாமி
அதிமுக - பாஜக கூட்டணி தொடரவேண்டும் என்பதற்காக பேசி வருகிறோம் என தமிழக பாஜகவின் மாநில துணை தலைவரான வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டம்
இன்று மாநில தலைவர் அண்ணாமலை இல்லாத போதிலும், தமிழக பாஜகவின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பாஜக கட்சி அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில், கூட்டம் மாநில பொறுப்பாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பாஜக தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியும் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுக - பாஜக கூட்டணி தொடரவேண்டும் என குறிப்பிட்டு, அது குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
இவரின் இக்கருத்துக்கள் தற்போது மீண்டும் தமிழக அரசியல் களத்தில் பல கேள்விகள் எழுப்பி இருக்கின்றது. எப்போதும் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தீர்மானம் நிறைவேற்றி தெரிவித்திருக்கும் நிலையில், பாஜகவின் துணை தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சலசலப்புகள் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது.