திமுக அரசை கண்டித்து திடீரென போராட்டத்தை அறிவித்த அதிமுக - எதற்கு தெரியுமா?

protest admk dmk tngovernment
By Petchi Avudaiappan Dec 06, 2021 10:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ பல்வேறு பணிகளை செய்யத்‌ தவறி வரும்‌ திமுக.அரசைக்‌ கண்டித்து அதிமுக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்‌நாட்டில்‌ திமுக ஆட்சிப்‌ பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல்‌ ஆகிவிட்ட போதிலும்‌, தேர்தல்‌ நேரத்தில்‌ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின்‌ அன்றாடத்‌ தேவைகளையும்‌, அவர்கள்‌ சந்திக்கும்‌ ஏராளமான பிரச்சனைகளுக்குத்‌ தீர்வு காண்பதிலோ மு.க.ஸ்டாலின்‌ தலைமையிலான அரசு சிறிதும்‌ அக்கறை கொள்ளாமல்‌ வாய்ச்‌ சவடால்‌ ஆட்சி நடத்திக்‌ கொண்டிருப்பதை அதிமுக வன்மையாகக்‌ கண்டிக்கிறது.

இந்த அலட்சியப்‌ போக்கினை எதிர்த்துப்‌ போராட அதிமுகவின் முழு ஆற்றலையும்‌ பயன்படுத்துவோம்‌ என்று எச்சரிக்கிறது.பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள்‌ குறைத்தால்‌, அவற்றின்‌ விலை குறைந்து மக்களுக்குப்‌ பயன்‌ கிடைக்கும்‌ என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. அண்மையில்‌ மத்திய அரசு தனது உற்பத்தி வரியை (கலால்‌ வரி) குறைத்ததன்‌ விளைவாக, நாடு முழுவதும்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலைகள்‌ ஓரளவுக்குக்‌ குறைந்தன.

மத்திய அரசின்‌ வரிக்‌ குறைப்பைத்‌ தொடர்ந்து 25-க்கும்‌ மேற்பட்ட மாநிலங்களும்‌, மத்திய அரசின்‌ கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட யூனியன்‌ பிரதேசங்களும்‌, தங்கள்‌ அதிகார வரம்புக்குள்‌ வரும்‌ “வாட்‌” எனப்படும்‌ மதிப்புக்‌ கூட்டல்‌ வரியைக்‌ குறைத்தன. இதன்‌ காரணமாக, அங்கெல்லாம்‌ பெட்ரோலும்‌, டீசலும்‌ லிட்டருக்கு 15 ரூபாய்‌ முதல்‌ 20 ரூபாய்‌ வரை கூட, விலை குறைந்திருக்கிறது.

தாங்கள்‌ ஆட்சிக்கு வந்தால்‌ பெட்ரோல்‌ விலையை லிட்டருக்கு 5 ரூபாயும்‌, டீசல்‌ விலையை லிட்டருக்கு 4 ரூபாயும்‌ குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக-வோ, பெட்ரோல்‌ விலையை மட்டும்‌ 3 ரூபாய்‌ அளவுக்குக்‌ குறைத்துவிட்டு கள்ள மெளனம்‌ காக்கிறது. மற்ற மாநிலங்களும்‌, மத்திய அரசும்‌ செய்திருப்பதைப்‌ போல வரிக்‌ குறைப்பை செய்து, கொடுத்த வாக்குறுதியைக்‌ காப்பாற்றி, பண வீக்கத்தைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ பிற மாநிலங்களில்‌ உள்ளதைப்‌ போல, பெட்ரோல்‌, டீசல்‌ விலைகளைக்‌ குறைக்க வேண்டும்‌ என்று அதிமுக வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறது.

 மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்‌, மக்களுக்கு மேலும்‌, மேலும்‌ சுமைகளை ஏற்றும்‌ திமுக அரசின்‌ செயல்களை அதிமுக வன்மையாகக்‌ கண்டிக்கிறது. தமிழ்‌நாடு முழுவதும்‌ லட்சக்கணக்கான மக்கள்‌ அண்மையில்‌ பெய்த பெருமழையால்‌ தங்கள்‌ வீடு, வாசல்களை இழந்துள்ளனர்‌. அன்றாடம்‌ வேலைக்குப்‌ போய்‌ தினக்‌ கூலி ஈட்டி வாழ்வை நடத்தும்‌ மக்கள்‌ வருமானம்‌ இன்றி தவிக்கின்றனர்‌. அரசின்‌ சார்பில்‌ அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த ஒரு நிவாரணமும்‌ வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதிமுக ஆட்சிக்‌ காலங்களின்‌ போது மக்களுக்கென உருவாக்கப்பட்ட முன்னோடித்‌ திட்டங்கள்‌ பலவற்றை இந்திய நாட்டின்‌ பல்வேறு மாநிலங்கள்‌, தாமும்‌ செயல்படுத்த ஆர்வம்‌ காட்டிவரும்‌ சூழ்நிலையில்‌, அந்தத்‌ திட்டங்களை எல்லாம்‌ காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்‌, கழகத்தின்‌ புகழ்‌ மீது கொண்ட பொறாமையாலும்‌ முடக்கிப்போட திமுக அரசு முயற்சிக்கிறது.

கனமழை, பெருவெள்ளம்‌, புயல்‌ போன்ற பேரிடர் காலமானாலும்‌ சரி; கொரோனா கொடுந்தொற்று நோய்‌ உச்சக்கட்டத்தில்‌ இருந்தபோது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலமானாலும்‌ சரி; வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்காக களப்பணி ஆற்றுவதிலும்‌ சரி, புறந்தூய்மை காக்கப்பட வேண்டும்‌, பேணப்பட வேண்டும்‌ என்பதை மட்டும்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு தங்கள்‌ உயிரை துச்சமென மதித்து, அல்லும்‌ பகலும்‌ அயராது ஓய்வின்றி உழைத்துக்‌ கொண்டிருக்கும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ உட்பட அனைவருக்கும்‌ 5,000/- ரூபாய்‌ ஊக்கத்‌ தொகை வழங்கிட திமுக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌. 

மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ பல்வேறு பணிகளை செய்யத்‌ தவறி வரும்‌ திமுக அரசைக்‌கண்டித்தும்‌; மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ துயரங்களுக்குத்‌ தீர்வுகாண வலியுறுத்தியும்‌, அதிமுக சார்பில்‌, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ அனைத்து மாவட்டத்‌ தலைநகரங்களிலும்‌, வருகின்ற 9,.12.2021 - வியாழக்‌ கிழமை காலை 10.30 மணியளவில்‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டங்கள்‌ நடைபெறும்‌.

இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டங்களில்‌, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச்‌ சோந்த கட்சி நிர்வாகிகளும்‌, முன்னாள்‌ அமைச்சர்களும்‌, அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌, கட்சியின் பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌, உள்ளாட்சி அமைப்புகள்‌ மற்றும்‌ கூட்டுறவு சங்கங்களின்‌ பிரதிநிதிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌, பொதுமக்களும்‌, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, பெருந்திளான அளவில்‌ கலந்துகொள்ளுமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.