ஜாபர் சாதிக்குடனான தொடர்பு பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!
ஜாபர் சாதிக்குடனான தொடர்பு பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக மகளிர் அணி சார்பில் 'மகளிர் தினவிழா' ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இதனையடுத்து ஜெயலலிதாவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 76 கிலோ கேக் வெட்டி மகளிர் அணியினருக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி "தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது.
பள்ளி கல்லூரிகளின் அருகில் போதை பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும் அதனை திமுக அரசு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். ஆனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தடுக்க தவறிவிட்டது.
அதிர்ச்சியளிக்கிறது
இந்த நிலையில் பிப்ரவரி 15-ம் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருட்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்த போதை பொருள் கடத்தலில் தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
அவர் மீது ஏற்கனவே 26 வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் குடும்பத்துடனும், காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் அவர் நெருங்கி பழகியிருப்பது வேதனையானது.
இந்த விவகாரம் பற்றியும் ஜாபர் சாதிக்குடனான தொடர்பு பற்றியும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அமைப்பு செயலாளரை வைத்து பேச வைத்துள்ளார்கள். இது ஏற்புடையதல்ல' என்று தெரிவித்துள்ளார்.