அதிமுக-பாஜக கூட்டணி வைத்தாலும்,முறித்தாலும் எப்படியும் திமுக தான் ஜெயிக்கும் - அமைச்சர் உதயநிதி!
அதிமுக-பாஜக கூட்டணி வைத்தாலும் சரி, கூட்டணியை முறித்துக் கொண்டாலும் சரி எப்படியும் திமுக தான் ஜெயிக்க போகிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
செயல்வீரர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் தேவராஜ் மஹால் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது "இந்தியாவிலேயே 1980-ல் ஒரு இயக்கத்துக்கு இளைஞர் அணி ஆரம்பித்தது என்றால் அது திமுகவில் தான். இந்த இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராக, படிபடியாக பொறுப்புகளை பெற்று சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என பல பொறுப்புகளை கடந்து தற்போது திமுக தலைவராகவும், முதல்வராக மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.
தற்போது இளைஞர் அணியில் 658 பேர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 452 பேர் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களுக்கு பொறுப்பு உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உதயநிதி பேச்சு
சமீபத்தில் ஒரு மாநாட்டை மதுரையில் ஒரு கட்சி நடத்தியது. ஒரு மாநாடு எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் அது. மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நமது சேலம் இளைஞர் அணி மாநாட்டை நிரூபித்து காட்ட வேண்டும்.
மத்திய பாஜக அரசு 9 ஆண்டுகள் மக்கள் விரோத ஆட்சியை தந்தார்கள். சாலை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி செலவு கணக்கு காட்டி உள்ளார்கள். ரமணா என்கிற சினிமாவில் இறந்த பிணத்தை வைத்து பணம் பறிப்பார்கள். திரையில் பார்த்ததை நிஜத்தில் செய்து காட்டி உள்ளார்கள். இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செய்துள்ளார்கள். அதானிக்கு அனைத்தையும் தாரை வார்த்து கொடுத்துள்ளது இந்த பாஜக அரசு. இவர்களை நாம் ஓட, ஓட விரட்ட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மேலும் பேசிய அவர் "தற்போது ஒரு தகவலை நான் கேள்விப்பட்டேன். அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக கே.பி.முனுசாமி கூறி இருக்கிறார். 2021 தேர்தலில் நாம் அதிமுகவை விரட்டினோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு விரட்ட வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி வைத்தாலும் சரி, கூட்டணியை முறித்துக் கொண்டாலும் சரி எப்படியும் திமுக தான் ஜெயிக்க போகிறது. அதற்கு அச்சாரமாக சேலம் இளைஞர் அணி மாநில மாநாடு அமைய வேண்டும்” என்று அவர் பேசினார்" என்று பேசினார்.