We Want Justice | மக்களவை, மாநிலங்களவைகளில் எம்.பிக்கள் கடும் அமளி - ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியது..!
எதிர்க்கட்சி எம்.பிக்களின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா புகார்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார்.
பின்னர் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் We Want Justice என கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நிர்மலா சீதாராமன் கொந்தளிப்பு
அவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாஜக எம்.பிக்களை மோசடி பேர்வழிகள் என்று கூறியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று கோபமாக தெரிவித்தார்.
இதனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதே போன்று மக்களவையிலும் கடும் அமளி ஏற்பட்டதால் மதியம் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது அவை மீண்டும் கூடியுள்ளது. இருந்த போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.