மேகதாது அணை விவகாரம்: திமுக மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியின் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகளே தற்போதைய சிக்கலுக்கு காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என அவர் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
தமிழகத்தின் சட்டப்பூர்வமான நீர் உரிமைகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் மேகதாது அணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் போதுமான அளவில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த கால குறைகளை முன்வைத்து தமிழகத்தின் நீர் உரிமை தொடர்பான போராட்டத்தை திசை திருப்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மேகதாது அணை விவகாரத்தை சுமுகமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கே அதிக பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். துங்கபத்ரா நீர் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டதைப் போல, மேகதாது பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.