அதானி குழும பங்குகள் மீண்டும் உயர்வு - மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்...!
அதானி குழும பங்குகள் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
மாபெரும் சரிவை சந்தித்த அதானி
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழும நிறுவனங்களை "வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டதை அடுத்து, கடந்த மாதம் பங்குகள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனையடுத்து, அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி சமீபத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்தார்.
ரிசர்வ் வங்கி உத்தரவு
இதனையடுத்து, அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குறித்தும், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதன் பிறகு, அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்கள் வெளியானது. எஸ்.பி.ஐ. வங்கி - ரூ.21,375 கோடியும், இண்டஸ்இண்ட் வங்கி - ரூ.14,500 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.7000 கோடி கடனை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டது.
பின்னுக்குத் தள்ளப்பட்ட அதானி
சமீபத்தில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு கடந்த வாரம் ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து, உலக பணக்காரர் பட்டியலில் அதானி 30 இடத்திற்கு மேல் தள்ளப்பட்டார்.

அதானி குழும பங்குகள் உயர்வு
தற்போது, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் கடந்த 2 நாட்களில் 31% வரை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
அதானி நிறுவன பங்குகள் செயற்கையாக 85% உயர்த்தப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை புயலை கிளப்பியிருந்த நிலையில், ஒரே மாதத்தில் 80% வரை பங்குகள் சரிந்தன.