நிலைகுலைந்த அதானி - உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து 24 இடத்துக்கு தள்ளப்பட்டார்...!
உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 3ம் இடத்திலிருந்து 24 இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மாபெரும் சரிவை சந்தித்த அதானி
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழும நிறுவனங்களை "வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டதை அடுத்து, பங்குகள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனையடுத்து, அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி சமீபத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துள்ளார்.
ரிசர்வ் வங்கி உத்தரவு
சமீபத்தில், அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குறித்தும், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து, அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்கள் வெளியானது. எஸ்.பி.ஐ. வங்கி - ரூ.21,375 கோடியும், இண்டஸ்இண்ட் வங்கி - ரூ.14,500 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.7000 கோடி கடனை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டது.
24ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி
இந்நிலையில், கடந்த 13 நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி குழும பங்கு விலைகள் இன்றும் 5 சதவீதம் சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீச்சியடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விவகாரம் நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டு வந்தன.
ஓய்வுபெற்ற நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் எம்.எல்.சர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தார்கள். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.