அய்யய்யோ...தனுஷ் தான் ஹீரோவா? - அலறிய பிரபல நடிகையின் அம்மா
காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக நடிகை சோனியா அகர்வால் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட அவர் தொடர்ந்து மதுர, திருட்டுபயலே, கோவில், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை என குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் காதல் கொண்டேன். 7ஜி ரெயின்போ காலனி படங்களின் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதியினர் பிரிந்தனர். தொடர்ந்து தடம், அயோக்யா ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால் மல்லி மற்றும் நாணல் சீரியலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மொழியே தெரியாத நிலையில் தனக்கு மொழியை கற்றுக்கொடுத்து நடிப்பையும் கற்றுக்கொடுத்தவர் செல்வராகவன் தான் என்றும், செல்வராகவனை திருமணம் செய்தால் என் சினிமா வாழ்க்கைப் பாதிப்படும் என்று நினைத்ததேயில்லை என்றும் சோனியா அகர்வால் கூறியுள்ளார். மேலும் காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் தான் ஹீரோ என சொன்னதும் என் அம்மா பயந்தார்கள்.
இந்த ஹீரோவுடன் நடித்து எப்படி உன்னுடைய கேரியர் சிறப்பாக இருக்கும் என வெளிப்படையாக தன்னிடம் தெரிவித்தார் என கூறும் சோனியா, என்னுடைய கேரியரில் காதல் கொண்டேனை எப்போதும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஷூட்டிங் சமயத்தில் செல்வராகவன் என்னை திட்டும்போது தனுஷ் வந்து தனக்கு ஆறுதல் கூறுவார் என்றும் சோனியா அகர்வால் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.