மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் கைதான நடிகை - ஜாமீனில் வெளியே வந்து பரபரப்பு பேட்டி!
மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் கைதான நடிகை ரஞ்சனா நாச்சியார் ஜாமீனில் வெளியே வந்து பேட்டியளித்துள்ளார்.
மாணவர்களை தாக்கிய நடிகை
சென்னையில் அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அதற்கும் மேலாக பேருந்தின் கூரை மீது ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
இதனை பார்த்த பாஜக நிர்வாகியும் , நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மாணவர்களை திட்டி கீழே இறக்கி விட்டார். மேலும், இறங்க மறுத்த சில மாணவர்களை கன்னத்தில் அறைந்தும், தலையில் அடித்தும் வலுக்கட்டாயமாக சட்டையைப் பிடித்து இழுத்து இறக்கி விட்டார். மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து மாணவர்களை தாக்கியதாகவும் அரசு பேருந்து ஓட்டுநரை ஓருமையில் பேசியதாகவும் நடிகை ரஞ்சனாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ரஞ்சனா, ஜாமின் கோரி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களின் உயிர் மேல் உள்ள அக்கறையிலே பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.
நீதி கிடைக்கும்
தன் குழந்தையை போல் பாவித்து தான் மாணவர்களை அடித்தார். உயிர் சேதத்தை தவிர்க்கவே தாய் போன்று நடிகை ரஞ்சனா வாக்குவாதம் செய்தார்.மேலும், ரஞ்சனாவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்குமார் "ஒரு தாய் இப்படித்தான் பேசுவார்களா" என்று காட்டாமாக கேள்வி எழுப்பினார். பின்னர் ரஞ்சானா 40 நாட்கள் காலை மாலை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த நடிகை ரஞ்சனா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது "நியாயமான விஷயத்தை தட்டி கேட்டால் நீதி கிடைக்கும் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. இதற்காக அனைவரும் அடித்து தான் நியாயம் கேட்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை.
என்னுடைய அணுகுமுறை சற்று தவறாக இருந்தாக நோக்கம் சரியான ஒன்றாகும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் மீது அக்கறை செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் போன்று மாணவர்களுக்கு என்று தனியாக பேருந்தை அரசு இயக்க வேண்டும். நீதிமன்றத்தில் இன்று எனக்கு கிடைத்த வெற்றி ஒவ்வொரு தாய்மாருக்கும் கிடைத்த வெற்றி" என்று நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.