நானும் சில தப்பு பண்ணிருக்கேன் - பிரபல நடிகை பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி
கதாநாயகியாக மட்டுமே நடிக்க வேண்டும் என சினிமாவிற்கு வரவில்லை என நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூர்ணா தொடர்ந்து வித்தகன், கந்தகோட்டை, துரோகி, கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் படி பெரிய வெற்றி அடையவில்லை.
அதேசமயம் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. வளர்த்துவிட்ட ரசிகர்கள் சொல்லும் நேர்மறை, எதிர்மறை கருத்துகளை ஒரே விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில எதிர்மறை கருத்துகளை வைத்து என்னை நான் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வந்தன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை.
நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும். ஷோபனா, ரேவதி, சுஹாசினி மாதிரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்தேன்.
சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது பூர்ணா ஆண்ட்ரியாவை மையமாக வைத்து மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.