காமெடியில் வெளுத்து வாங்க தயாராகும் நயன்தாரா!
வடிவேலுவின் எலி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினியுடன் 'அண்ணாத்த', விஜய் சேதுபதியுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'நெற்றிக்கண்' உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளிலில் நடித்து போராடித்து விட்டதால் தற்போது காமெடி பக்கம் ஒதுங்க நடிகை நயன்தாரா முடிவு செய்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார்.

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலு நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’எலி’ என்ற திரைப்படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார் நயன்தாரா.

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது.