நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல - பிறகு என்ன நடந்தது?
நடிகர் விவேக் உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது காரணமில்லை என தடுப்பூசி பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு தெரிவித்துள்ளது.
சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் ஏப்ரல் 17ம் தேதி அன்று அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்களிடையும், கலைத்துறையினரிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதேசமயம், தடுப்பூசி செலுத்திய இரண்டே நாள்களில் விவேக் உயிரிழந்ததால் தடுப்பூசி செலுத்தியதால்தான் அவர் இறந்துவிட்டார் என தகவல்கள் பரவியது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு, விவேக் இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளது. இந்த புகார் குறித்து அக்குழு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.