'நான் தலைவனாக மாறவேண்டுமா என்பதை ரசிகர்களும் சூழ்நிலையும் முடிவு செய்யும்' - நடிகர் விஜய் பளீச்

actorvijay beastmovie vijayonpolitics vijayasleader nelsoninterview actorvijayinterview
By Swetha Subash Apr 11, 2022 09:02 AM GMT
Report

நான் தலைவனாக மாறவேண்டுமா என்பதை ரசிகர்களும் சூழ்நிலையும் தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் விஜய் தெரிவித்திருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் பீஸ்ட் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது.

படத்தின் பாடல்கள் அடுதடுத்து இடைவெளி விட்டு வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. அண்மையில் படத்தின் டிரைலரும் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்களுக்கு படத்தின் மேல் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கான டிக்கெட்டிகள் விற்று தீர்ந்து விட்டன. டிக்கெட்டுகளை எடுத்து வைத்த விஜய் ரசிகர்கள் அதை தன்னுடைய சமூகவலைத்தளங்களில், ஸ்டேட்டில் போட்டு பெருமைப்பட்டு கொண்டு வருகின்றனர்.

இதற்கு மத்தியில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு நேர்காணல் அளித்த நடிகர் விஜய் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். விஜய்யை நேர்காணல் செய்த படத்தின் இயக்குனர் நெல்சன், கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என கேட்டார்.

அதற்கு பதிலளித்த விஜய், தான் தேவாலயத்திற்கும் போவேன், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கும் போவேன், மசூதியிலும் வழிபாடு நடத்தியுள்ளேன் என தெரிவித்தார். மேலும், வழிபாடு முறைகளில் தனது பிள்ளைகளிடமும் இதை தான் கூறிவருவதாகவும் விஜய் தெரிவித்தார்.

அடுத்ததாக தலைவனாக எப்பொழுது அவதரிக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு,  இளைய தளபதியாக இருந்த தன்னை தளபதியாக மாற்றியது ரசிகர்கள் தான். தான் தலைவனாக மாறவேண்டுமா என்பதை ரசிகர்களும் சூழ்நிலையும் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விரும்பியதால் அதற்கு சம்மதம் தெரிவித்தேன் எனவும் தற்போது தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்தார்.