‘பெரியாருக்கு சிலை வேண்டாம்.... வழிபடுவதை நிறுத்தி விடுங்கள்...’ - நடிகர் சித்தார்த் துணிச்சல் டுவிட்
பெரியாரை வணங்க வேண்டாம். பெரியாரை மட்டுமல்ல எந்த ஒரு மனிதரையும் வழிபடுவதை நிறுத்திவிடுங்கள் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பெரியாருக்கு தமிழகம் முழுவதும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நினைவு இடமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியாருக்கு பிரம்மாண்ட சிலைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் இது குறித்து பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பெரியார் இன்று இருந்தால் சிலை வைக்கும், நினைவுச்சின்னம் வைக்கும் ஒவ்வொரு மனிதனையும் முட்டாள் என்று நினைப்பார் என்பதை மறந்து விட வேண்டாம். பெரியார் மனிதர்களை தெய்வமாக வணங்குவதை எதிர்த்தார். அதனால் எந்த மனிதரையும் வணங்குவதை நிறுத்துங்கள்.
பெரியாருக்கு சிலை அமைக்க வேண்டாம். அவருக்கு மாலை அணிவித்து வணங்கதேவையில்லை. அவரை தெய்வமாகவே நினைப்பதை நிறுத்துங்கள். பெரியாரை மட்டுமல்ல எந்த ஒரு மனிதரையும் வழிபடுவதை நிறுத்துங்கள். இதை பெரியாரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். அவரது கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லுங்கள் ஒவ்வொரு மனிதனும் சமம். தன்மையாக நடந்துகொள்ளுங்கள். சுதந்திரமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சித்தார்த்தின் இந்த கருத்துக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும், மறுபக்கம், பெரியார் ஆதரவாளர்களிடையே சித்தார்த்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.