‘நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல....’ - நடிகர் சித்தார்த்தை கண்டித்த ஜோதிமணி

jothimani condemnation viral news actor siddharth post twitter
By Nandhini Jan 12, 2022 07:33 AM GMT
Report

சாய்னா நேவால் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாபில் நடந்த பாதுகாப்பு குளறுபடி குறித்துக் கருத்து தெரிவித்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த் பதில் கொடுத்தார். அதில் அவர் பயன்படுத்திய வார்த்தை ஆபாசமாக இருந்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து, சித்தார்த்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் சித்தார்த்தின் ஆபாச பதிவு குறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது -

நம் எல்லோரையும் போல சாய்னா நேவாலுக்கும் தனது அரசியல் கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது. அவருடைய கருத்தோடு முரண்பட்டால் நாகரிகமான முறையில் பதில் கருத்து சொல்லலாம். விமர்சிக்கலாம்.

அவர் பெண் என்பதாலேயே பாலியல் ரீதியான தாக்குதலை தொடுப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. சித்தார்த், தீவிரமான அரசியல் நிலைப்பாடு கொண்டவர். துணிச்சலாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவர்.

சிறந்த கலைஞர். சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர். இளைய தலைமுறைக்கு ஒரு முன்மாதியாக இருப்பவர். அப்படிப்பட்டவர் மிகுந்த கவனத்தோடும், பொறுப்போடும் கருத்துக்களை வெளியிடவேண்டும்.

பாஜக / ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, திரு.மோடி உள்ளிட்ட தலைவர்களால் சமூக ஊடகங்களில் பின்தொடரக்கூடிய அந்த இயக்கத்தினர், பெண்களிடம் ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் நடந்துகொள்கிறார்கள்.

பாலியல் ரீதியாக அச்சுறுத்தும் போக்கை கைக்கொள்கிறார்கள். பாஜகவின் இந்த ஆபாச, வக்கிர தாக்குதலை என் போன்ற எத்தனையோ பெண்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம்.

அதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அச்சமற்று தொடர்ந்து பாஜகவை தோலுரிக்கிறோம். ஆகவே நாம் கூடுதல் கண்ணியத்தோடு பெண்களிடம், பாஜக சகோதரிகளிடம் நடந்து கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.