காமெடி நடிகர்கள் பெயரில் அடுத்தடுத்து போலி ட்விட்டர் கணக்குகள்... இன்றைக்கு சிக்கிய பிரபலம் யார் தெரியுமா?
தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக பிரபல காமெடி நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த திரைப்பட காமெடி நடிகர் செந்தில், தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவங்கியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு ட்விட்டர், முகநூல் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எனவும், தான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் தனது பெயரில் விஷக் கிருமிகள் யாரோ போலியான கணக்கை ட்விட்டரில் துவங்கியுள்ளதை நண்பர்கள் மூலம் அறிந்ததாகவும், டாஸ்மாக் திறப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூடக் கோரிக்கை வைத்ததுபோல் அந்த கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் போலி கணக்கை நீக்கம் செய்யக்கோரி சைபர் கிரைம் போலீசார் மூலம் ட்விட்டர் நிறுவனத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.