விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்!
சின்ன சம்பளம் வாங்குற என்னையே மக்கள் ஈசியா சந்திச்சு பிரச்சனையை கேட்க முடியாது. அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய் பார்ப்பீங்க?" என தவெக தலைவர் விஜய் குறித்து நடிகர் சத்தியராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று சத்தியராஜ் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.
அதன் போது சத்தியராஜ் மேலும் பேசுகையில், தனது கொள்கைத் தலைவராக அம்பேத்கர், பெரியார் எனச் சொன்னபோது, விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பேசப் பேச.. தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி மரியாதை இல்லாமல் பேசினார்.
முதலில் ஸ்டாலின் சார் என்றார். அப்புறம் ஸ்டாலின் அங்கிள் என்று சொன்னார். எல்லோரையும் மரியாதையாகப் பேசும் விஜய் என்ன இப்படி பேசுகிறார் எனத் தோன்றியது. நாம பார்த்த விஜய் இப்படி இல்லையே..
தலைவா படம் வந்தபோது, கொடநாட்டுக்குப் போய் ஜெயலலிதாவை பார்த்தபோது, அம்மா அம்மா.. என்னை ரொம்ப மன்னிச்சுக்கங்கம்மா..என் தலைவா படத்தை எப்படியாச்சும் ரிலீஸ் பண்ணி விடுங்கம்மானு பேசுனாரு இல்லையா? அப்படித்தான் மரியாதையாக பேசுவார் என்று பார்த்தால் ஸ்டாலின் அங்கிள் எனப் பேசிவிட்டார்.
இப்படி ஜெயலலிதாவை பேசி இருந்தால் கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். அப்புறம் மேடையில் வந்து நான் ரெடி தான் என்றெல்லாம் பாடியிருக்க முடியாது.
ஒரு முதலமைச்சர் பெருந்தன்மையாக இருக்கிறார் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "சின்ன சம்பளம் வாங்குற என்னையே மக்கள் ஈசியா சந்திச்சு பிரச்சனையை கேட்க முடியாது. அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய் பார்ப்பீங்க?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.