உயிர் உள்ளவரை உதயநிதியும் உழைக்கும் - உழைப்பால் உயர்ந்தாரா?
நடிகரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடடுகிறார்.
ஆனால், தனது பிறந்தநாளை கழகத்தினர் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்கு மாறாக என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.
இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சினிமா துறையில் ஆர்வம் கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். நடிகராக ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்த உதயநிதி ஸ்டாலின் தந்தையும், தாத்தாவின் வழியில் அரசியலில் ஈடுபட தொடங்கினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்தார். அதன் படி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுகவிற்காக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். 2019 ஜூலை 7 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வரையும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினை போன்றே உதயநிதி ஸ்டாலினும் இளம் காளையாக களத்தில் இறங்கி அயராது உழைத்து வருகிறார்.
திமுக பொறுப்பேற்று முழுதாக ஆறு மாத காலம் கூட நிறைவு பெறாத இந்த நிலையில் தந்தையும், மகனும் மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த உழைப்பை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கலைஞரின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா என்பது தாண்டி கலைஞரின் இடத்தை உதயநிதிஸ்டாலின் நிரப்பி விடுவார் என்று பலரும் பேசி வருகின்றனர்.
என்னதான் அரசியலில் குதித்தாலும் தனது நடிப்பு பணியை தயாரிப்பாளர் பணியையும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கொண்டே தான் வருகிறார். இப்படி பல் முகமாக திகழும் உதயநிதிஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்.