எவருக்கு தனது சாதி என்ன தெரியாதோ..அவரே கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார் - கருணாஸ் கண்டனம்!
பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு நடிகர் சே. கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாஸ் கண்டனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்க் பரிவாரக் கும்பலைச் சேர்ந்த அனுராக் தாக்கூரின் திமிர் பேச்சு கடந்த ஜூலை 30 இல் நாடாளுமன்றத்தில் ஒலித்தது. இவர்களின் உண்மை முகம் அடிக்கடி இப்படிதான் வெளியே வரும். இந்திய மக்கள் முன் காவிகள் மீண்டும் அம்பலப்பட்டுள்ளார்கள்!
அதாவது, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியை குறி வைத்து, 'எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்' என்று கொக்கரித்தார்! நாடே அதை கேட்டது அவர்கள் யார் என்பதை அவர்களே அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.
அது மட்டுமல்ல, அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரதமர் மோடி அனுராக் தாக்கூரை பாராட்டியுள்ளார். இவர்கள் இழிவானவர்கள் என்பதை காட்ட நாட்டுமக்களுக்கு வேறென்ன சான்று வேண்டும்?
ராகுலை பார்த்து “ எவருக்கு தன் சாதி என்னவென்று தெரியாதவர்” என்று பேசும் அனுராக் தாக்கூர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை பார்த்து கேட்கிறேன்! இவர்களின் சாதி என்ன? சரி, தற்போது இவர்களது சாதி என்னவென்று தெரிந்திருக்கலாம். மூன்று நான்கு தலைமுறைக்கு முன் அனுராக் தாக்கூர், மோடியின் சாதி என்ன?
கணக்கெடுப்பு
அதற்கான சாதி சான்றிதழ் ஆதாரம் அவர்களிடம் உள்ளதா? இவர்கள் என்ன சாதியில் பிறந்தார்கள் என்பது யாருக்கு தெரியும். மற்றவரை பார்த்து சாதி தெரியாதவர் என்று பேசும் இவர்களுக்கு தன் சாதி என்னவென்று தெரியுமா? அதற்கு சான்று கேட்டு நாம் திரும்ப கேட்டால் என்ன செய்வார்கள்!
இதுதான் இவர்களின் ஆதிக்க திமிர்!மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. இட ஒதுக்கீடு அளிக்கச் சரியான தரவுகள் புள்ளிவிவரங்கள் தேவை. தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடுகள் கேட்டு சில சாதியினர் பெறுகிறார்கள்.
சாதி என்ன ?
சிலர் போராடி கொண்டே இருக்கிறார்கள். நாட்டில் எந்த சாதியினர் எண்ணிக்கையில் கூடுதலாக உள்ளனர் என்பது இன்னும் குழப்பநிலையிலேயே உள்ளது. அடுத்தபடியாக, பல நலத் திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. அப்போது ஒவ்வொரு சமூகத்தின் சமூக - பொருளாதார பின்னணி தெரிய வேண்டும்.
அடுத்ததாக, பல்வேறு சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் சரியா என்பதை அறிய இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பு தேவை!
அது மட்டுமின்றி இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் சரியான தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் அதை இரத்து செய்கிறது. அனைத்து சமுதாய மக்களும் எல்லா அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.