நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை - பரபரப்பு
நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்
கொச்சியில் கடந்த 2017ல் ஒரு நடிகை காரில் சென்ற போது, ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலர் அந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரித்ததில், இதில் மலையாள பிரபல நடிகர் திலீப்-க்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலை
தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி நடிகர் திலீப் கடந்த 2018-ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் 4½ ஆண்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில் நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் வருகிற டிசம்பர் 8-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் கோர்ட்டு அறிவித்தது. தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப்பை நீதிமன்றம் விடுதலை செய்தது.
போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை . அதே சமயம், பிரதான குற்றவாளியான பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார்.