பிரபல நடிகர் விபத்தில் மரணம் - முதல் படம் ரிலீசாவதற்குள் நடந்த சோகம்
சென்னையில் பிரபல நடிகர் ஒருவர் விபத்தில் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஜெயக்குமார் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்துள்ளார். பெரும் முயற்சிகளுக்கிடையே செங்குன்றம் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு ஜெயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அவரது பைக்கும் எதிரே வந்த மற்றொரு இளைஞரின் பைக்கும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் இருவருமே பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் ஜெயக்குமார் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
பெரும் கனவுகளோடு முதல் படத்தில் நடித்து வந்த ஜெயக்குமார் அப்படம் வெளிவருவதற்கு முன்பே மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.