தீவிரமாகும் நடிகை பாலியல் வழக்கு; அதிகாரிகளை பழி வாங்க சதித்திட்டம் : விசாரணைக்கு ஆஜரான திலீப்
மலையாள பிரபல நடிகையை கடத்திப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்டது நடிகர் திலீப் என இயக்குநர் பாலச்சந்திரகுமார் கூறியதுடன் சில ஆவணங்களையும் போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளார்.
நடிகையைப் பாலியல் தொல்லை செய்த வீடியோவை திலீப் பார்த்தார் என்றும், தன்னைக் கைதுசெய்த விசாரணை அதிகாரிகளான சந்தியா, பைஜூ பவுலோஸ், சுதர்சன், ஏ.வி.ஜார்ஜ் ஆகியோரைப் பழிவாங்கும் நோக்கில் திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் கூறியிருந்தார்.
இதையடுத்து அதிகாரிகளைப் பழிவாங்க சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் மீது க்ரைம் பிராஞ்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்யக் கூடாது என நடிகர் திலீப் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வரும் 27-ம் தேதி வரை திலீப்பை கைதுசெய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேசமயம் திலீப் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. க்ரைம் பிராஞ்ச் போலீஸார் திலீப்பிடம் மூன்று நாள்கள் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் முதல் நாள் விசாரணைக்காக கொச்சி களமசேரியில் உள்ள க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் திலீப் உள்ளிட்டவர்கள் ஆஜரானர்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் திலீப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்திய வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில் தனது முன்னாள் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திரகுமார் குறித்து சில தகவல்களை திலீப் கூறியுள்ளார்.
அதில், ``நடிகை வழக்கில் ஜாமீனை ரத்தாக்கிவிடுவேன் எனக் கூறி இயக்குநர் பாலச்சந்திரகுமார் பலதடவை என்னிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் வாங்கினார். மேலும் அவர் கேட்ட பணத்தைக் கொடுக்காததால் எனக்கு எதிராக மாறிவிட்டார்.
அவரின் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் கேட்டார், நான் மறுத்துவிட்டேன். அதுவும் அவரது கோபத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது. எனக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களில் உண்மை இல்லை. எங்களுக்கு எதிரான ஆதாரங்கள் புனையப்பட்டன.
எங்கள் உரையாடலைப் பதிவுசெய்ததாகக் கூறும் டேப் கண்டுபிடிக்கப்படவில்லை" என திலீப் கூறியுள்ளார்.
இதற்கிடையே நடிகை கடத்தப்பட்ட வழக்கு விசாரணையை ஆறு மாதங்கள் நீட்டிக்கவும், நீதிபதியை மாற்றவும் கேரள அரசு முயல்வதாகவும், விசாரணையை நீட்டிக்கக் கூடாது எனவும் நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.