கதறி அழும் மாணவர்கள்: விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும்; கவலை படமாட்டேன் - நடிகர் தாமு பளீச்
மாணவர்களுக்கு நடத்தும் தனது தன்னம்பிக்கை பேச்சை விமர்சிப்பவர்களுக்கு நடிகர் தாமு பதிலளித்துள்ளார்.
நடிகர் தாமு
90ஸ் களில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் நடிகர் தாமு. இவர் விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து புகழ் பெற்றார்.
கடந்த சில வருடங்களாக திரைப்படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட தாமு தன்னை 'அப்துல் கலாமின் சீடன்' என்ற அடைமொழியுடன் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தன்னம்பிக்கை பேச்சு நடத்தி வருகிறார். தனது பேச்சை தொடங்கும் முன்னர் மாணவர்களை கண்களை மூடிக்கொள்ள சொல்லும் தாமு, பின்னணியில் சோகமான இசை ஒலிக்க "பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் படும் கஷ்டத்தை" எடுத்து சொல்கிறார். இதனை கேட்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு மாணவர்களும் கண்களை மூடியவாறு கதறி அழுகின்றனர்.
இவரின் இந்த பேச்சுகள் ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர், ஆனால் மற்றோரு தரப்பு, எதுவும் அறியாத குழந்தைகளைத் தேவையில்லாத குற்றவுணர்ச்சிக்கு தாமு தள்ளுகிறார். இதனால் அவர்கள் அதீத மனஅழுத்தத்துக்குள்ளாகின்றனர். இது முற்றிலும் தவறான போக்கு என்ற கடும் விமர்சனங்களைம் முன்வைத்து வருகின்றனர். பேச்சு இந்நிலையில் இதுகுறித்து நடிகர் தாமு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "கடந்த 12 வருஷமா மாணவர்களைச் சந்தித்து தன்னம்பிக்கை ஊட்டிக்கிட்டு வர்றேன். இதுவரைக்கும் என் நிகழ்ச்சியை யாருமே விமர்சித்தது கிடையாது. ஆசிரியர்கள், பெற்றோர்களின் அற்புதத்தை, மகத்துவத்தை மாணவர்களுக்குப் புரிய வைக்கிறேன்.
விமர்சிக்கறவங்க விமர்சிக்கட்டும்
இன்னும் சொல்லப்போனா, பெற்றோர் இல்லாம நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கிறதில்ல. ஆசிரியர்களும் பெற்றோரும் இருந்தா மட்டும்தான் பேசுறேன். 'உங்கப் பேச்சைக் கேட்டதுலருந்து, என் பிள்ளைங்க நல்லா படிக்கிறாங்க.
ஆளே மாறிட்டாங்க'ன்னு பல பெற்றோர்கள் மனநிறைவா சொல்றாங்க. இந்த விஷயத்தை யார் செஞ்சாலும் பாராட்டுவேன். என்னை நெகட்டிவா விமர்சிக்கிறவங்க இதைப் பண்ணட்டும். நான் ஸ்கூலுக்குப் போறதை நிறுத்திட்டு சினிமாவுக்கே போயிடுறேன். உண்மையைச் சொல்லணும்னா, நான் செய்யும் நல்ல விஷயத்தைத் திசை திருப்புவது ஊடகங்கள்தான். ஏன்னா, நானா போயி 'நீங்க அழுங்க'ன்னு சொல்றது கிடையாது. என் பேச்சைக் கேட்டு அவங்களே அழுவுறாங்க. அழுறதை மட்டும்தான் ஊடகங்கள் வெளில காட்டுது. ரெண்டு மணிநேரம் மாணவர்களைச் சிரிக்கவும் வைக்கிறேன்.
விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அதையெல்லாம் காட்டுறதில்ல. விமர்சிக்கறவங்களும் அழுவுறதை மட்டும் பார்த்துட்டு எதுவும் தெரியாம விமர்சிச்சுடுறாங்க. முழு நிகழ்ச்சியைப் பார்க்கிறதில்ல. மாணவர்கள் அழுவுறதால குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டு நல்லா படிப்பாங்க. நல்ல மார்க் எடுத்து வளர்ச்சியை நோக்கி மட்டும் கவனத்தை செலுத்துவாங்க. அவங்களோட பயணம் வளர்ச்சி நோக்கி மட்டுமே இருக்கும். எனக்கு மாணவர்களின் முன்னேற்றம்தான் முக்கியம். விமர்சிக்கறவங்க விமர்சிக்கட்டும். அதுபற்றில்லாம் நான் கவலப்படுறதில்ல" என்று தாமு பேசியுள்ளார்.