சேலத்தில் பயங்கர விபத்து.., அரசு பேருந்து மோதி 7 பேர் பலி
ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
பேருந்து இன்று காலை 11 மணிக்கு சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள சூளைமேடு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலையின் குறுக்கே பாய்ந்தது.

சாலையில் வந்துகொண்டிருந்த டெம்போ மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையின் குறுக்கே நின்றது.
விபத்துக்குள்ளான டெம்போவில், கொண்டாலம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். இதில் 11 பேர் பயணித்தனர்.
இந்த விபத்தில் விக்னேஷின் தந்தை செல்வராஜ்(50), அமுதா, முருகன், ஜீவிதா(11 மாத குழந்தை), நித்திஸ்கா(5) 5 பெரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த கொண்டாலம்பட்டி சந்தன காரன்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(22) மற்றும் அவரது தாய் இருசாயி(60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து அறிந்த கொண்டாலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த 4 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.