வருண் சக்ரவர்த்தி தேர்வாகாத காரணம் இது தான் - போட்டுடைத்த அபிஷேக் நாயர்
வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்கு தேர்வாகாத காரணம் குறித்து அபிஷேக் நாயர் பேசியுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி
தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் பின் அவருக்கு 2021 T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் அதற்கு பின்னர் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதன்பின், 2023 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளும், 2024 ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்டுகளும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும், 3 ஆண்டுகளாக அவருக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அபிஷேக் நாயர்
இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்காததுக்கு காரணம் என்ன என்பது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறார். ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் அவரிடம் ஒருமுறை பேட்டிங் மற்றும் பீல்டிங்கை மேம்படுத்துமாறு கூறியது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அப்போது தான் அவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதை நோக்கித்தான் வருணும் பயிற்சி செய்தார். அவருடைய ஃபீல்டிங்கிலும் அவர் நன்கு முன்னேறியிருக்கிறார். ஏனெனில், தற்பொழுது மூன்று துறைகளிலும் நன்றாக செயல்படவேண்டும் என்பதை வீரர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.