சாதனைக்கு வயதில்லை - அப்துல்கலாம் புத்தகத்தை தலைகீழாய் எழுதி சாதனை படைத்த 52 வயது தமிழர்!!
ஒசூரை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர், அப்துல்கலாம் எழுதிய ஆங்கில புத்தகத்தினை பின்வரிசையில் தலைகீழாய் எழுதி இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
சாதனைகளில் பலவகை உண்டு.. நாம் எதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை உணராமல் ஆணழகனாக உடலை மெருகேற்றுவது, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்டவைகளில் அசத்துவதே சாதனை என பலரும் நினைப்பதுண்டு. இதில் பலர் படித்து வேலைக்கு சென்று ஊதியம் பெறுவதேயே சாதனையாக நினைப்பதுண்டு.
ஆனால், ஒசூரை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் தனது 52 வயதில் பேனா, காகிதத்தை வைத்தே சாதித்து காட்டி இருக்கிறார்.
அப்படி என்ன சாதனை?
தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த கணேசன், ஒசூர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றும் இவர் சிறந்த ஓவியராவார்.
கணேசனின் தந்தையான லட்சுமணன் ஓவியர் என்பதால் தந்தையிடம் ஓவியம் வரைவதை கற்றுக்கொண்டதாகவும், அவர் தமிழ் எழுத்துகளை சரளமாக பின்வரிசையிலிருந்து தலைகீழாக எழுதுவதை பார்த்து அவ்வபோது இவரும் மற்றவர்களுக்கு புரியாத வகையில் அவ்வபோது எழுதி வந்துள்ளார்.
இதுவே நாளடைவில் சாதனையாக மாறும் என்பதை அவர் அப்போது அறியவில்லை.
ஒருநாள் தற்செயலாக இணையத்தில் ஒருவர் ஒரு நிமிடத்தில் ஆங்கிலத்தில் 20 எழுத்துக்களை தலைகீழாக எழுதியதே சாதனையாக அங்கீகரித்ததை கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.. நாம் சரளமாகவே தலைகீழாக எழுத முடியுமே, நாம் ஏன் முயற்சிக்க கூடாது என எண்ணி ஆங்கிலத்தில் ஒருபுத்தகத்தையே தலைகீழாய் எழுதுவது என முடிவு செய்து எழுதியுள்ளர்.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகளின் ஆங்கில பதிப்பான விங்க்ஸ் ஆஃப் ஃபைர் புத்தகத்தின் மொத்தமுள்ள 180 பக்கங்களையும் தலைகீழாக நோட்டு புத்தகத்தில் 200 பக்கங்களாக எழுதியுள்ளார்.
45 நாட்களுக்கு பிறகு அவரின் சாதனை முயற்சியை பல சாதனை விருதுகளுக்காக விண்ணப்பித்தபோது கணேசனின் முயற்சியை இந்தியன் புக் ஆஃப் ரெகாரட்ஸ், KALAM'S WORLD RECORD, INTERNATIONAL ACHIVEMENT INADIAN AWARD, மற்றும் BRAVO AWARDS ஆகிய சாதனை புத்தகங்களில் அவரின் சாதனை முயற்சியை உலகசாதனையாக அங்கீகரித்துள்ளனர்..
சாதனை புரிய வயது தேவையில்லை, முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த வயதிலும் எந்த துறையிலும் வெற்றி பெற்று சாதனை புரியலாம் என்பதற்கு இவரே சாட்சியாகும்.
இவரின் இந்த சாதனை அப்துல்கலாமின் புத்தகத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.