டிவில்லியர்ஸ்க்கு உலகக்கோப்பைக்கான 20 ஓவர் தொடரில் இடமில்லை
20 ஓவர் உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் டிவில்லியர்ஸ் இடம்பெற மாட்டார் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் மிகப்பெரும் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வந்த அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், 2018ம் ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் டிவில்லியர்ஸ் விளையாடவில்லை.
அவரின் தோல்விக்கு பிறகு அந்த அணி அதிகமான தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தான் தயாராக இருப்பதாக அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 தொடர்களில் டிவில்லியர்ஸ் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், தென்னாபிரிக்க ரசிகர்கள் டிவில்லியர்ஸை 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் நிச்சயம் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரித்தனர். தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியமும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான அணியில் டிவில்லியர்ஸை சேர்க்க அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் 20 ஓவர் உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்க அணியில் டிவிலியர்ஸ் இடம்பெற மாட்டார். இந்த தகவல் டிவில்லியர்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.