அஸ்வினை இனிமேல் டீம்ல எடுக்காதீங்க - எச்சரிக்கை விடுக்கும் முன்னாள் இந்திய வீரர்
இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் இனி தேவைப்பட மாட்டார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 - 2 என தோல்வியடைந்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக இழந்தது. இந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு பவுலர்கள் சரிவர விக்கெட்டுகள் எடுக்காமல் ரன்களை வாரி வழங்கியதே காரணம் என கூறப்படுகிறது.
இதனிடையே முன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளனர். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சோபித்தது போன்று 50 ஓவர் போட்டியில் அஸ்வினால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. அவருக்கு உறுதுணையாக வந்த சாஹல் மற்றும் ஜெயந்த் யாதவும் கைக்கொடுக்கவில்லை.
அதேபோல் ஒருநாள் போட்டித்தொடரில் அஸ்வின் - சஹால் ஆகியோர் சேர்ந்தே மூன்று போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் தான் எடுத்துள்ளனர். ஜெயந்த் யாதவும் பெரிதாக ஏதும் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் இனி ஒருநாள் கிரிக்கெட்டிற்கு சரிபட்டு வரமாட்டார்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
அதேசமயம் இந்திய அணிக்கு மீண்டும் குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஜோடியை கொண்டு வர வேண்டும். எதிரணி ஸ்பின்னர்கள் ஒரு போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் நமது ஸ்பின்னர்கள் மொத்த தொடரிலேயே 3 விக்கெட்டுகள் தான் எடுத்தனர். எனவே அஸ்வின் - ஜெய்ந்தை நீக்கிவிட்டு, மாற்று வீரர்களை களமிறக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.