“அவர டீம்ல எடுக்காம பெரிய தப்பு பண்ணிட்டீங்க “ - இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர்
நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் கே.எஸ் பாரத், பிரசீத் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு இடம் கிடைத்துள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரிக்கு இடம் கொடுக்காதது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதேபோல் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுத்துள்ளது இந்திய அணியின் தேர்வுக்குழுவை விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஹனுமா விஹாரியை எடுக்காத இந்திய அணியின் தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரியின் பெயர் இடம்பெறாதது ஏற்றுக்கொள்ள முடியாத விசயம். இது இந்திய தேர்வுக்குழுவின் மிகப்பெறும் தவறு என தெரிவித்துள்ளார்.

கசிந்தது இந்தியாவின் தாக்குதல் திட்டம்: அணு ஆயுதத்துடன் களமிறங்குவதாக அறிவித்த பாகிஸ்தான்..! IBC Tamil
