இணையத்தில் கசிந்த ஜனநாயகன்; இவர்கள் இருவருமே காரணம் - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
இணையத்தில் கசிந்த ஜனநாயகன்
தவெக தலைவர் விஜய் நடிப்பில் கடைசி படமான ஜனநாயகன், கடந்த ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால் தற்போது வரை படம் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது.

தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் திரைப்பட காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் படத்தின் கசிந்த காட்சிகள் மற்றும் படத்தின் லிங்கை பகிர்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் எச் வினோத், "ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்பே அது கசிவது உண்மையிலேயே வேதனையானது. தயவுசெய்து அதைப் பகிராமல் ஆதரவளியுங்கள்" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தவெக பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது விஜய்க்கான மிரட்டல். ஜனநாயகன் படத்தை முடக்கியது எல்.முருகனும், உதயநிதியும்தான்.

எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பிவைத்தது உதயநிதிதான். சேட்லைட் கன்ட்ரோல் பாஜகவிடம் தான் உள்ளது.
ஜனநாயகன் படத்தை நிறுத்த பாஜக எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தது என தெரியும். விஜய்க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர் திமுகவினர் எம்ஜிஆருக்கும் இதேபோன்ற நெருக்கடிகளை கொடுத்தனர்" என தெரிவித்துள்ளார்.