மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு 100 சதவீதம் கட்டாயம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
கண்டிப்பாக 100 சதவீதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவதுாறு செய்திகள் பரப்பபடுகிறது
கோவை பீளமேடு பகுதியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின் கட்டண விவகாரத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறையை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதுாறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதுாறு செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
யார் பெயரில் மின் இணைப்பு இருக்கிறதோ அந்த நபர் இறந்து இருக்கும் பட்சத்தில் அதற்கான அவகாசங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஆதார் இணைப்பு கட்டாயம்
சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. தங்கள் மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன.
ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்.
மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தார் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும் என்றார்.