மண்சரிந்து தொழிலாளி பலி- ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
மதுரையில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
புது விளாங்குடி ராமமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஈரோடு அமராவதி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வேலை செய்துகொண்டிருந்தார்.
இப்பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 20 அடி ஆழத்தில் தொழிலாளி சதீஷ் சிக்கினார். இதனை அடுத்து மண் அகற்றும் இயந்திரம் மூலம் மீட்பு பணி நடைபெற்றபோது தொழிலாளியின் தலை துண்டானது. உடலை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
பின் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மூலம் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மேயர் இந்திராணி, காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு
நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.