மகளுக்காகஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய்..
மதுரை அருகே 16 வயது மகளை சிலர் கடத்தியதாகக் கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூதக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி என்பவரது கணவர் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தன்னுடைய 16 வயது மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த மருது என்ற இளைஞர் தன்னுடைய மகளை கடத்திச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தன்மகளை கண்டுபிடித்து தராமல் காவல்துறையினர் அலட்சியமாக இருப்பதாக குற்றம்சாட்டி நாகமணி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார்.
அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.