ஒமைக்ரானை தொடர்ந்து வரும் புதிய வகை கொரோனா - இங்கிலாந்து விஞ்ஞானி எச்சரிக்கை
உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவும் ஒமைக்ரானை விட அடுத்து வரும் புதிய வகை மோசமாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளிலும் மனித இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸானது டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாறி பரவி வருகிறது.
ஒமைக்ரான் பாதிப்பால் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ரவீந்திர குப்தா இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் தொற்று நோய்களுக்கான பிரிவில் பேராசிரியராக இருந்து வருகிறார்.இவர் ஒமைக்ரான் வகை பற்றி சமீபத்தில் ஆய்வு செய்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட காலசூழலிலும் கொரோனா மிக திறமையாக பரவி வருகிறது. அதனால் அது லேசாக உள்ளது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. இதனை ஒரு பரிணாம பிழை என நான் நினைக்கிறேன். இது, அடுத்து வரும் கொரோனா வகை மிக கடுமையாக இருக்கும் என்று அடையாளப்படுத்தி உள்ளது.
புதிய வகை ஒமைக்ரானின் பண்புகளை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், டுப்பூசி செலுத்தி கொள்வது முக்கியம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் லேசான பாதிப்பு ஏற்படுத்தும் வகையான ஒமைக்ரான் இருக்கும் சூழலில் இதனை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் ரவீந்திர குப்தா தெரிவித்துள்ளார்.