பேரறிவாளன் விடுதலை வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன்,தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீண்டும் பேரறிவாளன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அமைச்சரவை தனக்குரிய சட்ட அதிகார பிரிவின் கீழ் முடிவெடுத்து ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பும் விஷயம் மீது ஆளுநர் அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு நபரை விடுவிக்கவோ அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் அவர் முடிவெடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.