பேரறிவாளன் விடுதலை - திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? சவால் விட்ட நடிகை குஷ்பூ

A. G. Perarivalan Kushboo
By Nandhini May 19, 2022 06:34 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் இருந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டனர். மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர்.

பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து இன்று வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்ளை துணியை கட்டிகொண்டும், கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை, தமுக்கம் மைதானம் நேரு சிலை முன்பாக வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு, எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரஸின் நடவடிக்கை இருக்கிறது" என்று சவால் விடும் வகையில் பதிவிட்டுள்ளார்.      

பேரறிவாளன் விடுதலை - திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? சவால் விட்ட நடிகை குஷ்பூ | A G Perarivalan